போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி சாவு - உதவி கலெக்டர் விசாரணை

போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி உயிரிழந்தார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2018-12-26 21:45 GMT
போடி,

போடியை அடுத்த தர்மத்துப்பட்டியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது31). இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ராசிங்காபுரத்தை சேர்ந்த சாந்திக்கும் (28) கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் சாந்தி கர்ப்பம் அடைந்தார். அதையொட்டி அவருக்கு வாந்தி, மயக்கம் வந்தது. எனவே அவர் போடியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். எனினும் அவருக்கு தொடர்ந்து வாந்தி, மயக்கம் வரவே நேற்று முன்தினம் மாலை போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மயக்க நிலையில் இருந்த அவரை டாக்டர்கள் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்தவுடன் போடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி, சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சாந்திக்கு திருமணம் ஆகி 2 வருடங்களே ஆவதால் அவரது சாவு குறித்து உத்தமபாளையம் உதவி கலெக்டர் வைத்திநாதன் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்