பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்து சேலத்தில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் - மாநகராட்சி ஆணையாளர் தொடங்கி வைத்தார்

பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்து சேலத்தில் நடந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலத்தை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார்.

Update: 2018-12-26 23:15 GMT
சேலம்,

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று சேலம் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் நடந்தது. இந்த ஊர்வலத்தை ஆணையாளர் சதீஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் கலெக்டர் அலுவலகம், செரி ரோடு, அஸ்தம்பட்டி ரவுண்டானா வழியாக கோரிமேடு சட்டக்கல்லூரி வரை சென்றடைந்தது. அப்போது ‘நீர்நிலைகளை காப்போம்‘, ‘கடைகளுக்கு பொருட்கள் வாங்கும் போது துணிப்பை எடுத்து செல்வோம்‘ என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை வைத்திருந்தனர். ஊர்வலத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கூறும் போது, ‘தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வருகிற 1-ந் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக சேலம் மாநகராட்சி மக்களுக்கு வருகிற 30-ந் தேதி வரை விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அரசு அறிவுரையின் பேரில், அபராதம் அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.

இந்த ஊர்வலத்தில் செயற்பொறியாளர் அசோகன், மாநகர் நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையாளர்கள் ரமேஷ்பாபு, கோவிந்தன், ஜெயராஜ், போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்