‘கஜா’ புயலால் சாய்ந்து ஒரு மாதம் ஆகியும் கோடைகால நீர்த்தேக்கத்தில் அகற்றப்படாத மரங்கள்

கோடைகால நீர்த்தேக்கம் பகுதியில் ‘கஜா’ புயலால் சாய்ந்த மரங்கள் ஒரு மாதமாகியும் அகற்றப்படாமல் உள்ளன.

Update: 2018-12-28 22:15 GMT
பழனி, 

கடந்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி வீசிய ‘கஜா’ புயலின் கோரத்தாண்டவத்தால் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தோட்டங்களில் இருந்த ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் மரங்கள் விழுந்ததில் மின்கம்பங்கள், வீடுகளும் சேதமடைந்தன.

நகராட்சி மற்றும் பிற துறைகள் சார்பில் உடனடியாக சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் இயல்பு நிலைக்கு திரும்பின. இந்த நிலையில் புயலின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் பழனி கோடைகால நீர்த்தேக்க பகுதியில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

மேலும் அங்கு நட்டு வைக்கப்பட்டிருந்த மின்கம்பங்களும் மரங்கள் சாய்ந்ததில் முறிந்து விழுந்தன. இதனால் கோடைகால நீர்த்தேக்க பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் மரங்கள் விழுந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் இதுவரை அகற்றப்படவில்லை. இதனால் நீர்த்தேக்கத்தை பார்வையிட முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதி மக்களுக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே கோடைகால நீர்த்தேக்கம் பகுதியில் விழுந்து கிடக்கும் மரங்களை உடனடியாக அகற்றிவிட்டு மின் இணைப்பு கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்