சமைக்கவில்லை எனக்கூறி கணவன் அடித்து உதைத்ததால் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை முயற்சி

சமைக்கவில்லை எனக் கூறி கணவன் அடித்து உதைத்ததால் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற் கொலைக்கு முயன்றார். அவர்கள் 4 பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Update: 2018-12-28 22:00 GMT
கரூர், 


கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பட்டவர்த்தியை சேர்ந்தவர் துரைபாண்டி. கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கார்த்திகா (வயது 28) என்ற மனைவியும், கனிஷ்கா (8), தனுஷ்கா (6), துர்கா (3) ஆகிய 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். துரைபாண்டிக்கு குடிப்பழக் கம் இருந்துவந்துள்ளது.

இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்படுமாம். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு துரைபாண்டியன் மது அருந்திவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் தான் காய்கறிகள் வாங்கி கொடுத்தும் அதை சமைக்கவில்லை எனக்கூறி, மனைவி கார்த்திகாவை திட்டி அடித்த உதைத்து விட்டு வெளியே சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த கார்த்திகா தற்கொலை செய்ய முடிவு செய்து அரளிவிதையை (விஷவிதையை) அரைத்து அதை உணவில் கலந்து சாப்பிட்டுள்ளார். தான் இறந்த பிறகு தனது மகள்கள் துன்பப்படுவார்கள் என நினைத்து தனது 3 மகள்களுக்கும் விஷம் கலந்த உணவை கொடுத்துள்ளார்.

இதன்பின்னர் அன்று இரவு வீட்டிற்கு வந்த தனது கணவன் துரைபாண்டியிடம், அரளிவிதை கலந்த உணவை தானும், 3 குழந்தைகளும் சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து துரைப்பாண்டி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இதில் கனிஷ்கா, தனுஷ்கா ஆகிய இருவர் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்