பட்டாபிராமில் வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.12¾ லட்சம் மோசடி ரியல் எஸ்டேட் தரகர் கைது

பட்டாபிராமில், வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.12 லட்சத்து 74 ஆயிரம் மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் தரகரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-29 23:00 GMT
ஆவடி,

ஆவடியை அடுத்த பட்டாபிராம் கோபாலபுரம் 15-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 49). ரியல் எஸ்டேட் தரகர். இவர், அதே பகுதியை சேர்ந்த மின்சார ரெயில் டிரைவரான சரவணகுமார் (44), உறவினரான பழனி மற்றும் ஆவடி தபால்காரரான சந்திரசேகர் ஆகியோரிடம் பட்டாபிராம் அடுத்த சோராஞ்சேரி பகுதியில் தனது உறவினருக்கு சொந்தமான வீட்டுமனையை விற்கப்போவதாக கூறினார்.

இதையடுத்து வீட்டுமனையின் நகலை பெற்றுக்கொண்ட இவர்கள் 3 பேரும், ரூ.54 லட்சத்து 74 ஆயிரத்துக்கு பேசி முடித்தனர். பின்னர் முன்பணமாக ரூ.12 லட்சத்து 74 ஆயிரத்தை ஏகாம்பரத்திடம் கொடுத்தனர்.

பின்னர் அந்த இடத்துக்கான ஆவண நகலில் இருந்த உரிமையாளரான நீலா என்பவரிடம் சென்று விசாரித்தனர். அப்போது அவர், அந்த இடத்தை தான் விற்கவில்லை என்றும், ஏகாம்பரம் தனது உறவினர் இல்லை என்றும் தெரிவித்தார்.

ஏகாம்பரம்தான் அந்த நிலத்தை நீலாவுக்கு வாங்கி கொடுத்து உள்ளார். அந்த ஆவணங்களின் நகலை வைத்து இவர்களிடம் அவர் நூதன மோசடியில் ஈடுபட்டது பின்னர் தெரிந்தது. இதையடுத்து சரவணகுமார், தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டார். ஆனால் ஏகாம்பரம் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.

இதையடுத்து சரவணகுமார் அளித்த புகாரின்பேரில் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட ஏகாம்பரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்