திருச்செந்தூர் அருகே பயங்கரம் கள்ளக்காதலியை பார்க்கச் சென்ற தொழிலாளி வெட்டிக்கொலை வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

திருச்செந்தூர் அருகே கள்ளக்காதலியை பார்க்கச் சென்ற தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-12-30 22:45 GMT
திருச்செந்தூர், 

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் விசாலாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் அய்யப்பன் என்ற நிஜாம் (வயது 39) கூலித்தொழிலாளி. இவருக்கும், சாத்தான்குளத்தை சேர்ந்த பிரியா என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணம் ஆன 2 ஆண்டுகளில் கணவன்-மனைவி பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில் அய்யப்பனுக்கு திருச்செந்தூர் அருகே காட்டுமுகதும்பள்ளி அம்பேத்கர்புரம் பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த சரோஜா என்ற பாத்திமா (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. சரோஜாவுக்கு 3 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். இதில் 2-வது மகன் ரமேஷ் (23).

அய்யப்பன் அடிக்கடி சரோஜாவிடம் தகராறு செய்து வந்தார். இந்த சம்பவத்தை அறிந்த ரமேசுக்கு அய்யப்பன் மீது கோபம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று மதியம் அய்யப்பன், சரோஜாவை பார்க்க வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் அருகே அரிவாளுடன் பதுங்கி இருந்த ரமேஷ், அய்யப்பனை வழிமறித்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் அய்யப்பன் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுகுறித்து உடனடியாக திருச்செந்தூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அய்யப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரமேஷ் கட்டிட தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்