இரட்டை கொலையில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி வசவப்பபுரத்தில் கடைகள் அடைப்பு

வல்லநாடு அருகே நடந்த இரட்டை கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி வசவப்பபுரத்தில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன.

Update: 2018-12-30 22:15 GMT
ஸ்ரீவைகுண்டம், 

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பக்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமையா மகன் சுடலைமணி (வயது 18). இவர் நெல்லையில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு முறப்பநாடு பஸ் நிறுத்தம் பகுதியில் சுடலைமணி மற்றும் அவரின் தாத்தா முத்துசாமி (65) ஆகியோர் முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய அண்ணன், தம்பிகளான மாரிமுத்து, சின்னத்தம்பி ஆகியோர் ஆலங்குளம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

இந்த கொலை சம்பவத்தை கண்டித்தும், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை விரைவில் போலீசார் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வல்லநாடு- செய்துங்கநல்லூர் இடையே உள்ள வசவப்பபுரத்தில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் போலீசாருக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்