வனத்துறையில் கவர்னர் கிரண்பெடி மீண்டும் ஆய்வு; ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்கீழ் மேம்படுத்த அறிவுறுத்தல்

வனத்துறையில் மீண்டும் ஆய்வு நடத்திய கவர்னர் கிரண்பெடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வனப்பகுதியை மேம்படுத்த அறிவுறுத்தினார்.

Update: 2018-12-30 23:15 GMT
புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடி கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வனத்துறை அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து அவர் வனத்துறை அலுவலகத்தை சுற்றியுள்ள வனப்பகுதிக்குள் சென்று பார்வையிட்டார்.

முழுமையாக அந்த வனப்பகுதியை சுற்றி வந்த அவர் அதை பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிட வலியுறுத்தினார். அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய கூறினார்.

இந்தநிலையில் நேற்று அவர் 212-வது வார ஆய்வாக மீண்டும் வனத்துறையில் ஆய்வு செய்தார். அந்த ஆய்வின்போது வனத்துறை செயலாளர் கந்தவேலு, வனக்காப்பாளர் குமார், கவர்னரின் கூடுதல் செயலாளர் சுந்தரேசன், தொழில்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, சுற்றுலாத்துறை இயக்குனர் முகமது மன்சூர் ஆகியோரும் உடனிருந்தனர்.

அப்போது அந்த வனப்பகுதியில் உள்ள மரங்கள் என்ன வகையை சேர்ந்தது? என்பதை அறிய அதற்கான பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. பாதைகளும் சுத்தமாக பராமரிக்கப்பட்டிருந்தன. இதற்காக வனத்துறை அதிகாரிகளை அவர் பாராட்டினார்.

தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி (பொலிவுறு நகரம்) திட்டத்தின்கீழ் இந்த வனப்பகுதியை மேம்படுத்த திட்டங்களை தயாரிக்கவும் அவர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்