தண்ணீர் பிடிப்பதில் தகராறு: தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை

வேடசந்தூர் அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2018-12-30 23:25 GMT
வேடசந்தூர், 

வேடசந்தூர் அருகே உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர், வேடசந்தூரில் ஒர்க்‌ஷாப் வைத்து நடத்தி வருகிறார். அவருடைய மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு ராம்குமார், மோகன்ராஜ் (வயது 17) ஆகிய 2 மகன்கள் இருந்தனர்.

இதில் மோகன்ராஜ் தண்ணீர்பந்தம்பட்டியில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் பி.ஏ. தமிழ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை வீட்டின் முன்பு உள்ள தெருக் குழாயில் மோகன்ராஜ் தண்ணீர் பிடிக்க சென்றார். அப்போது மோகன்ராஜிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்கள் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் பெண்கள் மோகன்ராஜை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த மோகன்ராஜ் வீட்டுக்குள் சென்று மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே தகவல் அறிந்ததும் வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் மோகன்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்த கல்லூரி மாணவரின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்