பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை: சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் குவிந்த பொதுமக்கள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்

பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையையொட்டி சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் பொதுமக்கள் குவிந்தனர். படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Update: 2018-12-31 22:30 GMT
அன்னவாசல்,

புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை செல்லும் சாலையில் அன்னவாசல் அருகே சித்தன்னவாசல் சுற்றுலா தலம் உள்ளது. இது தென்னிந்தியாவின் அஜந்தா குகை என்று அழைக்கப்படுகிறது. இங்கு புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் சுற்றுலா தலத்தில் முக்கியமான நாட்கள் மட்டும் அல்லாமல் தினமும் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் இருப்பர். இப்போது பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் தொடர் விடுமுறையையொட்டி பொதுமக்கள் குடும்பத்தினருடனும், நண்பர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் என அதிக அளவு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்களும் பெண்களும் குடும்பம் குடும்பமாக சித்தன்னவாசல் சுற்றுலா தலத்திற்கு வந்திருந்தனர். சில சுற்றுலா பயணிகள் காலை முதல் மாலை வரை சுற்றுலா தலத்திலே மதிய உணவுடன் வந்து பொழுதை கழித்தனர். வெளியூர்களில் இருந்து கார், வேன், பஸ் மூலம் சுற்றுலா பயணிகள் அதிக அளவு வந்திருந்தனர்.

சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் இங்குள்ள சிறுவர் பூங்கா தமிழன்னை சிலை, மகாவீரர் சிலை, அதிநவீன முறையில் இசை நீரூற்று குகை ஓவியம், மலை மீது அமர்ந்த சமணர் படுக்கையான ஏழடி பட்டம், போன்றவற்றை கண்டு கழித்தனர். மேலும் சிறுவர் பூங்கா, மண் யானைகள் போன்றவற்றில் விளையாடியும் செல்போன், கேமராக்களில் புகைப்படங்கள் எடுத்து குழந்தைகளுடன் மகிழ்ச்சி பொங்க விளையாடி மகிழ்ந்தனர்.

சித்தன்னவாசல் வரும் சுற்றுலா பயணிகள் மலையின் அழகை ரசித்தவாறு படகு குளத்தில் குடும்ப சகிதங்களுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

மேலும் கடந்த நவம்பர் மாதம் கஜா புயல் காரணமாக சித்தன்னவாசலில் உள்ள பூங்காக்களில் இருந்த மரங்கள் அனைத்தும் காற்றில் விழுந்து சேதமடைந்தது. இதனால் பூங்காக்கள் வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா வரும் பயணிகள் அமர்வதற்கு நிழல்யின்றி தவித்தனர்.

சுற்றுலா தலத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் கூறியதாவது:-

சித்தன்னவாசல் சுற்றுலா தலத்திற்கு நாங்கள் குடும்பத்துடன் வந்துள்ளோம். ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இங்கு வந்தபோது பூங்காக்களில் அதிக அளவு மரங்கள் இருந்தது. நல்ல நிழலில் அமர்ந்து சுற்றி பார்த்து சென்றோம். தற்பொழுது வீசிய புயலால் பூங்காவில் உள்ள மரங்கள் அனைத்தும் விழுந்து, பூங்கா தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மரங்கள் இல்லாததால் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே மீண்டும் மரங்களை நட்டு பூங்காவை பராமரிக்க வேண்டும். படகு குளத்தில் சில படகுகள் உடைந்து ஓரங்கட்டப்பட்டிருக்கின்றது. நான்கு படகுகள் மட்டுமே இயக்கப்படுகின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் படகு சவாரி செய்வதற்கு காத்திருக்க வேண்டியது உள்ளது. மேலும் கூடுதல் படகுகளை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

மேலும் செய்திகள்