தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் அபராதம்

தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் அபராதம் விதிக்கப்படும் என்று கடலூர் நகராட்சி ஆணையாளர் கூறியுள்ளார்.

Update: 2018-12-31 22:30 GMT
கடலூர், 

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து கடலூர் நகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பாலு தலைமை தாங்கினார்.

நகர் நல அலுவலர் அரவிந்த்ஜோதி, துப்புரவு ஆய்வாளர்கள் பாக்கியநாதன், கிருஷ்ணராஜ், சிவா, மணிவண்ணன், ஜெயச்சந்திரன், பிரபாகரன், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர்கள் ஆனந்தன், அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் பாலு, நகர் நல அலுவலர் அரவிந்த்ஜோதி ஆகியோர் வியாபாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

தொடர்ந்து ஆணையாளர் பாலு கூறுகையில், பிளாஸ்டிக் கைப்பை, தேநீர் குவளை, பிளாஸ்டிக் தட்டு, தண்ணீர் பாக்கெட் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட் களை பயன்படுத்த தமிழக அரசு நாளை (அதாவது இன்று) முதல் தடை விதித்துள்ளது. ஆகவே கடலூர் நகராட்சி பகுதியில் இந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது. மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றார். அப்போது வியாபாரிகள் தங்களுக்கு 15 நாட்கள் காலஅவகாசம் வழங்க வேண்டும் என்றும், பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதை கேட்ட அதிகாரிகள், கண்டிப்பாக யாரும் பிளாஸ்டிக் பொருட் களை பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர். கூட்டத்தில் கடலூர் நகர அனைத்து வியாபாரிகளும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்