தேசியவாத காங்கிரஸ்- பா.ஜனதா இடையேயான ‘முறையற்ற உறவால் மாநில அரசு உருவானது’ உத்தவ் தாக்கரே காட்டம்

தேசியவாத காங்கிரஸ், பா.ஜனதா இடையேயான முறையற்ற உறவால் தான் மராட்டிய அரசு உருவானது என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே காட்டமாக கூறியுள்ளார்.

Update: 2019-01-01 00:00 GMT
மும்பை,

அகமதுநகர் மாநகராட்சிக்கு சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக சிவசேனா 24 இடங்களை கைப்பற்றியது. ஆனால் 14 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பா.ஜனதா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ்வாடி கட்சி ஆதரவுடன் மேயர், துணை மேயர் பதவியை கைப்பற்றியது. இது சிவசேனாவிற்கு கடும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.

இந்தநிலையில் இதுகுறித்து சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே சாம்னா பத்திரிகையில் தனது ஆதங்கத்தை கூறியுள்ளார்.

அதில் அவர், அகமதுநகர் மாநகராட்சி மேயர் தேர்தல் முடிவு எந்த வகையிலும் சிவசேனாவிற்கு பின்னடைவு அல்ல. பா.ஜனதா, தேசியவாத காங்கிரஸ் இடையே நீண்டகாலமாக முறையற்ற அரசியல் உறவு உள்ளது. அகமதுநகர் மேயர் தேர்தலில் அது வெளிப்பட்டுள்ளது. மராட்டியத்தில் உருவான பா.ஜனதா அரசு கூட தேசியவாத காங்கிரஸ், பா.ஜனதா இடையேயான முறையற்ற உறவால் உருவானது தான் என்று கூறியுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மராட்டியத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது தனிப்பெரும் கட்சியாக இருந்த பா.ஜனதாவிற்கு நிபந்தனையில்லாத ஆதரவு அளிப்பதாக தேசியவாத காங்கிரஸ் தாமாக முன்வந்து அறிவித்தது. இதையடுத்து பா.ஜனதா தனித்து ஆட்சியமைத்தது. அதன்பின்னர் தான் சிவசேனா அந்த அரசில் பங்கு பெற்றது. பா.ஜனதாவுக்கு தேசியவாத காங்கிரஸ் அளித்த ஆதரவை தான் தற்போது உத்தவ் தாக்கரே குறிப்பிட்டு பேசி உள்ளார்.

மேலும் செய்திகள்