அரசு ஒதுக்கிய இடத்தை அளவீடு செய்து தரக்கோரி ஆதிதிராவிட மக்கள் சாலை மறியல்

அரசு ஒதுக்கிய இடத்தை அளவீடு செய்து தரக்கோரி ஆதிதிராவிட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-01 23:00 GMT
உடையார்பாளையம்,


அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே ஆதிச்சனூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட மக்கள் 64 பேருக்கு கடந்த 2007–ம் ஆண்டு அரசு இலவச வீட்டு மனைபட்டா வழங்கியது. அந்த இலவச வீட்டு மனைபட்டா தனியாருக்கு சொந்தமானது என கூறி அப்பகுதியை சேர்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பில் ஆதிதிராவிடர்களுக்கு அளவீடு செய்து ஒதுக்கும்படி அண்மையில் தீர்ப்பு வெளியானது. இதனையடுத்து கடந்த மாதம் வருவாய் துறையினர் அங்கு சென்று மனைகளை அளவீடு செய்து ஒதுக்கினர். அப்போது சுமார் 12 பேருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், வழக்கு தொடர்ந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அளவீடு செய்யும் பணி நிறுத்தப்பட்டது. அப்போது மீதமுள்ளவர்களுக்கு அளவீடு செய்யவில்லை, இதனை கண்டித்து ஆதிதிராவிட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


இந்த நிலையில் அரசு ஒதுக்கிய இடத்தை அளவீடு செய்து தரக்கோரியும், 12 பேருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போடப்பட்டிருந்த குடிசைகளை வழக்கு தொடர்ந்த நபர் நேற்று பிரித்தெரிந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று தா.பழூர்– விளாங்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா, வருவாய்த் துறையினர் நாளை (இன்று) பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட ஆதிதிராவிட மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் தா.பழூர்– விளாங்குடி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்