வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.6½ லட்சம் மோசடி தம்பதி மீது வழக்குப்பதிவு

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.6½ லட்சம் மோசடி செய்த தம்பதி மீது திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2019-01-01 22:15 GMT
திருச்சி, 

திருச்சி உறையூரை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 47). திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் ஹக்கிம்(48). இவரது மனைவி ரகமத் நிஷா (35). இந்த தம்பதி, அசோக்குமாரை அணுகி தான்சானியா நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறினர். இதனை நம்பி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தனக்கு தெரிந்த 12 பேரிடம் அசோக்குமார், பணம் பெற்றார். அந்த வகையில் ரூ.6 லட்சத்து 55 ஆயிரத்தை வங்கி மூலம் ஹக்கிம் கணக்கில் செலுத்தினார்.

ஆனால், ஹக்கிம் 12 பேரையும் தான்சானியா நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அனுப்பி வைத்தார். மேலும் அங்கு உரிய வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் அவர்கள் சொந்த செலவில் தாயகம் திரும்பி இதுகுறித்து அசோக்குமாரிடம் கூறினர்.

இதையடுத்து பணத்தை திருப்பி தருமாறு தம்பதியிடம் அசோக்குமார் கேட்டார். ஆனால், அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. மேலும், வெளிநாட்டில் வேலையும் வாங்கி கொடுக்கவில்லை. இதனால், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.6 லட்சத்து 55 ஆயிரத்தை பெற்று மோசடி செய்த தம்பதி மீது திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் அசோக்குமார் மனு தாக்கல் செய்தார். இதுகுறித்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி, ஹக்கிம் மற்றும் அவரது மனைவி ரகமத் நிஷா ஆகியோர் மீது மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த தம்பதி டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதாகவும், 2 பேரும் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் மாநகர குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்