தாம்பரம் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தில் தகராறு; வாலிபர் வெட்டிக்கொலை

தாம்பரம் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-01-02 23:15 GMT

தாம்பரம்,

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் கணபதிபுரம் செல்லியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்தவர் யுவராஜ் என்ற பப்லு (வயது 20). டிப்ளமோ படித்துள்ள இவர், தற்போது வேலை இல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

கடந்த 31–ந்தேதி இரவு கணபதிபுரம் பகுதியில் அதே பகுதியைச்சேர்ந்த டோரி மணி மற்றும் அவருடைய நண்பர்கள் புத்தாண்டை கேக் வெட்டிக்கொண்டாட கும்பலாக இருந்தனர். அப்போது அங்கு வந்த யுவராஜ், அவர்களுடன் தகராறில் ஈடுபட்டார்.

இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் யுவராஜ், அங்கிருந்து சென்றுவிட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு டோரி மணி மற்றும் அவருடைய நண்பர் ராஜி உள்பட சிலர் தங்களுடன் தகராறில் ஈடுபட்ட யுவராஜை தேடி வந்தனர். இதனால் பயந்துபோன யுவராஜ், வீட்டுக்கு செல்லாமல் அதே பகுதியில் சுற்றித்திரிந்தார்.

அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கு அவர் இல்லாததால் ஆத்திரத்தில் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர். பின்னர் யுவராஜ் வழக்கமாக மது அருந்தும் தாம்பரம் அடுத்த இரும்புலியூர் ஏரிக்கரை பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கு தனியாக மது அருந்திக்கொண்டிருந்த யுவராஜை, அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில் தலை, கழுத்து மற்றும் உடலில் பல இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த யுவராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள், யுவராஜ் கொலை செய்யப்பட்டு ஏரிக்கரையில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள், சேலையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் செல்லப்பா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கொலையான யுவராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மணி என்ற டோரி மணி, ராஜ் உள்பட 7 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்