முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் டெல்லியில் நடைபெறும் போராட்டம் வெற்றி பெற கவர்னர் வாழ்த்து

முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் டெல்லியில் நடைபெறும் போராட்டம் வெற்றி பெற கவர்னர் கிரண்பெடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-02 23:15 GMT
புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி நேற்று காலை கால்நடை நலத்துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே நியாய விலைக்கடைகள் மூலம் இலவச பொருட்கள் வழங்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படியேதான் பொங்கல் இலவச பொருட்களும் வழங்க முடியும். அதன் அடிப்படையில் கோப்புகளை அனுப்பினால் மட்டுமே தன்னால் ஒப்புதல் வழங்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் செய்தியாளர்கள் அவரிடம், கவர்னரை (தங்களை) மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 4-ந்தேதி (நாளை) முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அனைத்து கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற உள்ள போராட்டம் குறித்து கேள்வி கேட்ட போது,

என்னை திரும்பப்பெறக்கோரி 4-ந்தேதி டெல்லியில் முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெறும் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டு வரட்டும். இன்று என்ன நடக்கிறது என்பதை மட்டுமே பார்க்க வேண்டும், நாளை நடப்பதை யாராலும் கணிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்