கன்னியாகுமரி கடலில் 2–வது நாளாக கடல் சீற்றம்; படகு போக்குவரத்து ரத்து சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கன்னியாகுமரியில் 2–வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2019-01-03 22:45 GMT
கன்னியாகுமரி,


புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்து ரசித்து விட்டு முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்வார்கள்.

 பின்னர், கடலில் நடுவே ஒரு பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், அதன் அருகில் மற்றொரு பாறையில் அமைக்கப்பட்டுள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்து ரசித்து விட்டு திரும்புவது வழக்கம்.

நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. திடீரென சூறாவளி காற்று வீசியதால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் 10 மணியளவில் உடனடியாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

 பின்னர், மதியம் 2.40 மணியளவில் கடல் இயல்நிலைக்கு திருப்பியதை தொடர்ந்து மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது.


இந்தநிலையில் நேற்று 2–வது நாளாக காலை முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மேலும், சூறாவளி காற்று வீசியதால் ராட்சத அலைகள் எழுந்து கரையில் உள்ள பாறைகளில் மோதி சிதறியது. இதனால் 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு நுழைவாயிலில் அறிவிப்பு பலகையும் தொங்கவிடப்பட்டு இருந்தது. படகில் செல்வதற்காக படகுத்துறைக்கு ஆர்வத்துடன் வந்த வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அறிவிப்பு பலகையை கண்டு மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

பின்னர், பிற்பகல் 3 மணியளவில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து படகு போக்குவரத்து தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது.

மேலும் செய்திகள்