குடும்ப தகராறில் கத்தி, மதுபாட்டிலால் மாறி, மாறி தாக்கிக்கொண்ட கணவன்-மனைவி இருவரும் மருத்துவமனையில் அனுமதி

குடும்ப தகராறில் கத்தி, மதுபாட்டிலால் மாறி, மாறி தாக்கிக்கொண்ட கணவனும், மனைவியும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2019-01-03 22:15 GMT
திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ள திட்டச்சேரி காலனி தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவருடைய மனைவி கொடி அரசி(35). இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். செந்தில்குமார், தனது மனைவி கொடி அரசியுடன் கோவையில் தங்கி இருந்து கொத்தனாராக வேலை செய்து வந்தார். இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தனர்.

நேற்று காலை ஏற்பட்ட தகராறின்போது ஆத்திரம் அடைந்த செந்தில்குமார், கத்தியால் கொடி அரசியின் கழுத்தை அறுத்து, தாக்குதல் நடத்தினார். அதேபோல மனைவி கொடி அரசியும் அருகில் இருந்த மது பாட்டிலை உடைத்து செந்தில்குமாரின் வயிற்றில் குத்தினார். இதில் செந்தில்குமாரின் குடல் வெளியில் வந்தது.

கத்தி மற்றும் மதுபாட்டிலால் மாறி, மாறி தாக்கிக்கொண்டதில் கணவனும், மனைவியும் படுகாயம் அடைந்தனர். வலியால் அலறிக்கொண்டிருந்த அவர்களை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் உள்ள அவர்கள் இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடும்ப தகராறில் கணவனும், மனைவியும் கத்தி, மதுபாட்டிலால் மாறி, மாறி தாக்கிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்