பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை எதிரொலி: ஆற்றங்கரையோர பகுதியில் வளரும் சேம இலைக்கு திடீர் ‘மவுசு’

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை எதிரொலியால் ஆற்றங்கரையோர பகுதியில் வளரும் சேம இலைக்கு திடீரென மவுசு ஏற்பட்டுள்ளது.

Update: 2019-01-03 22:30 GMT
லாலாபேட்டை,

ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள், கப்புகள், பைகள் ஆகியவற்றால் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுவதோடு நீர்நிலைகளும் மாசுபடுகின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டு, ஜனவரி 1-ந் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி பயன்படுத்துவோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதனால், பிளாஸ்டிக் பேப்பர்களை பயன்படுத்தி வந்த ஓட்டல்கள், சாலையோர டிபன் கடை உரிமையாளர்கள் வாழை இலையில் உணவு பரிமாறி வருகின்றனர். தற்போது வாழை இலையின் விலை கூடி உள்ளதால் என்ன செய்வது என்று தெரியாமல் வியாபாரிகள் தவித்து வருகிறார்கள்.

வாழை இலை அதிக விலைக்கு விற்பதால் அதனை வாங்க முடியாத சிறு வியாபாரிகள் ஆற்றங்கரையோர பகுதிகளில் வளரும் சேம இலையை நாடி வருகின்றனர். இதனால், சேம இலைக்கு திடீரென மவுசு கூடியுள்ளது. ஆற்றங்கரையோரம் மற்றும் வயல்வெளி பகுதிகளில் வளரும் இந்த இலையை முன்பெல்லாம் அதிகம் யாரும் பயன்படுத்த மாட்டார்கள். தற்போது லாலாபேட்டை பகுதியில் இறைச்சிக்கடை, கருவாடு கடைகளில் இந்த இலையை அதிகளவு கேட்பதால் இதனை பறிக்கும் பணியில் இப்பகுதி பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். 100 இலைகள் கொண்ட ஒரு கட்டு ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

மேலும் செய்திகள்