பிளாஸ்டிக் மாற்று பொருட்களை உற்பத்தி செய்ய கடனுதவி கலெக்டர் நடராஜன் தகவல்

பிளாஸ்டிக் மாற்று பொருட்களை உற்பத்தி செய்ய மகளிர் சுய உதவிக்குழு, தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கப்படும் என்று கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-03 22:53 GMT
மேலூர்,

தமிழக அரசு கடந்த 1-ந் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது. அதன்படி மதுரை மாநகர், புறநகர் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று அரசுத்துறை அலுவலர்கள் துண்டு பிரசுரம் வழங்கி கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் மேலூரில் நேற்று கலெக்டர் நடராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பஸ் நிலைய பகுதிக்கு சென்ற அவர், அங்குள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் ஆய்வு நடத்தி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று அறிவுறுத்தினார். பின்னர் பஸ் பயணிகளிடம் இலவசமாக துணிப்பைகளை வழங்கி பிளாஸ்டிக் பையை பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.

பின்னர் கலெக்டர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாவட்டம் முழுவதும் இதுவரை 7 ஆயிரத்து 800 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் 110 குழுக்கள் அமைக்கப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் விதமாக சோதனை நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக பிளாஸ்டிக் பொருட்களை கடை உரிமையாளர்கள் பயன்படுத்துவது தெரியவந்தால் கடுமை யான நடவடிக்கை எடுக்கப் படும். பிளாஸ்டிக் மாற்று பொருட்களை உற்பத்தி செய்ய மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கும், தொழில் முனைவோருக்கும் கடனுதவி வழங்கி ஊக்கப்படுத்தப்பட உள்ளது. மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேரணி நடத்தி வருகிறோம். வீடு, வீடாக சென்று பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்களிடம் இருந்து பெறுவதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த குழுக்களிடம் அபராதம் விதிப்பார்களோ என்று பயப்படாமல் எவ்வித தயக்கமின்றி தாமாகவே வந்து பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட் களை வழங்கலாம். பிளாஸ்டிக்கே இல்லாத மாவட்டமாக மதுரை மாவட்டம் இருக்க பொதுமக்களும், வியாபாரிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மேலூர் நகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்களிடம் இருந்து பெறுவதற்காக ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட பேட்டரி வாகனத்தை பார்வையிட்டு, அதனை ஓட்டினார். இந்த ஆய்வில் மேலூர் நகராட்சி ஆணையாளர் கண்ணன், துப்புரவு அலுவலர் முருகேசன், துப்புரவு ஆய்வாளர் சரவணன், தாசில்தார் சரவணன், அ.தி.மு.க. நகர செயலாளர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

முன்னதாக சோழவந்தான், வாடிப்பட்டி, நாகமலைபுதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்தார். மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்