தகராறை விலக்கிவிட்ட தொழிலாளியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

தகராறை விலக்கிவிட்ட தொழிலாளியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2019-01-04 22:30 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள தென்குச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 48), தொழிலாளி. அதே கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் என்கிற கார்த்திகேயன் (30). இவருக்கும் அவரது தந்தை பாலசுந்தரத்திற்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 4.8.12 அன்று சொத்து தகராறு காரணமாக கார்த்திக்கிற்கும், அவரது தந்தை பாலசுந்தரத்திற்கும் வீட்டு முன்பு வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற ராஜாராம், ரவிச்சந்திரன் (39) ஆகியோர் தகராறை விலக்கி விட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், தான் வைத்திருந்த கத்தியால் ராஜாராமின் கழுத்தில் குத்தியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் இதை தடுக்க முயன்ற ரவிச்சந்திரனின் கையிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து ராஜாராமின் மகன் நந்தகோபால், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜமுனா, குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக்கிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட கார்த்திக், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வேலவன் ஆஜரானார்.

மேலும் செய்திகள்