உதவி உபகரணங்கள் பெற மாற்றுத்திறனாளிகள் 14-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சாந்தா தகவல்

உதவி உபகரணங்கள் பெற மாற்றுத்திறனாளிகள் வருகிற 14-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2019-01-04 22:30 GMT
பெரம்பலூர், 

தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் 2 கால்கள் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிக்கு விலையில்லா இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது. தசை சிதைவு நோய் அல்லது பக்கவாதத்தால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 2 கால்களும், 2 கைகளும் செயலிழந்தவர்களுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் வழங்கப்பட உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் பெற 18 வயது முதல் 45 வயது வரை உள்ள இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாற்றுத்திறனாளிகள் அரசு மற்றும் தனியார் தையல் பயிற்சி மையங்களில் தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இது வரை அரசு துறைகளில் தையல் எந்திரம் பெறாதவராக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் விலையில்லா இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் பெற 18 வயதுக்கு மேற்பட்ட இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மேலும் இது வரை அரசு துறைகளில் இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் பெறாதவராக இருக்கவேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் பெற ஆண் மாற்றுத்திறனாளிகள் 60 வயதிற்கு மிகாமலும், பெண் மாற்றுத்திறனாளிகள் 55 வயதிற்கு மிகாமலும் இருக்கவேண்டும். கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மத்திய- மாநில அரசுகளில் பணிபுரியும் மேற்கண்ட வகையை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்படும்.

எனவே, தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, பணிபுரிபவர்களாக இருந்தால் பணிச்சான்று ஆகியவற்றுடன் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வருகிற 14-ந் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04328-225474 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்