அமாவாசையையொட்டி உழவர் சந்தைகளில் ரூ.84 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை

அமாவாசையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் ரூ.84 லட்சத்துக்கு காய் கறிகள் விற்பனை ஆனது.

Update: 2019-01-05 21:30 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, தாதகாப்பட்டி, எடப்பாடி, இளம்பிள்ளை, மேட்டூர், ஜலகண்டாபுரம், ஆத்தூர், தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு காய்கறிகளின் வரத்திற்கு ஏற்ப விலை குறைந்தும், உயர்ந்தும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த சந்தைகளில் நேற்று மார்கழி மாத அமாவாசையையொட்டி வழக்கத்தை விட காய்கறிகள் விற்பனை அதிகமாக நடைபெற்றது. காய்கறிகளை வாங்க பொதுமக்கள் அதிகளவில் வந்திருந்தனர். சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை ஆகிய உழவர் சந்தைகளில் 609 விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை கொண்டு வந்தனர். இந்த காய்கறிகள் ரூ.49 லட்சத்து 10 ஆயிரத்து 523-க்கு விற்பனையாகி உள்ளது.

இதேபோல் ஆத்தூர், எடப்பாடி, இளம்பிள்ளை, மேட்டூர், ஜலகண்டாபுரம், தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய உழவர் சந்தைகளில் 576 விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்தனர். ரூ.35 லட்சத்து 11 ஆயிரத்து 32-க்கு விற்பனையாகி உள்ளது. மாவட்டத்தில் உள்ள மொத்தம் 11 உழவர் சந்தைகளிலும் நேற்று 262 டன் காய்கறிகள் ரூ.84 லட்சத்து 21 ஆயிரத்து 555-க்கு விற்பனையாகி உள்ளது. 61 ஆயிரத்து 127 நுகர்வோர்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி சென்றுள்ளனர் என உழவர்சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்