ஒரத்தநாடு அருகே மனைவியை, அரிவாளால் வெட்டிக்கொன்ற தொழிலாளி கைது

ஒரத்தநாடு அருகே குடும்பத்தகராறில், மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-01-05 23:15 GMT
ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கீழஉளூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 45).கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ரூபாவதி(35). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 7வயது மற்றும் 5 வயதில் 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்த மணிகண்டனுக்கும் அவருடைய மனைவி ரூபாவதிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தனது மனைவியை சரமாரியாக வெட்டினார். இதில் கழுத்து உள்பட உடலின் பல பாகங்களில் வெட்டுக்காயம் அடைந்த ரூபாவதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அடைக்கலம் ஆரோக்கியசாமி டேவிட் சம்பவ இடத்துக்கு சென்று ரூபாவதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் இது குறித்து ரூபாவதியின் சித்தி திலகவதி அளித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

குடும்ப தகராறில் மனைவியை தொழிலாளி வெட்டிக்கொன்ற சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்