மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

வேடசந்தூர் அருகே மின்மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-01-06 22:30 GMT
வேடசந்தூர், 

வேடசந்தூர் அருகே உள்ள அம்மாபட்டி புதுப்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 55). விவசாயி. இவர், அப்பகுதியில் உள்ள தனது வயலில் நெல் சாகுபடி செய்துள்ளார். நேற்று காலை தண்ணீர் பாய்ச்சுவதற்காக சீனிவாசன் வயலுக்கு சென்றார். இதையடுத்து கிணற்றின் அருகே உள்ள மின்மோட்டாரை இயக்கு வதற்காக பொத்தானை (சுவிட்ச்) அழுத்தினார்.

அப்போது, மின்கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வயலுக்கு சென்ற சீனிவாசன், நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரை தேடி சென்றனர்.

அப்போது, மோட்டார் அருகே வயலுக்குள் சீனிவாசன் பிணமாக இறந்து கிடப்பதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பானு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து இறந்த சீனிவாசனின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்