கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் மறியல்

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-07 23:00 GMT
தஞ்சாவூர்,


வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடந்த நவம்பர் மாதம் 16–ந்தேதி கரையை கடந்தது. அப்போது வீசிய பலத்த சூறாவளி காற்று காரணமாக ஏராளமான குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் சேதம் அடைந்தன. லட்சக்கணக்கான தென்னை மரங்களும் முறிந்து விழுந்தன.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகின்றன. மேலும் 27 வகையான நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.


தஞ்சையை அடுத்த குருங்குளம் பகுதியும் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏராளமான குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் சேதம் அடைந்தன. தென்னை மரங்களும் முறிந்து விழுந்தன. ஆனால் இந்த பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

குருங்குளம் கிழக்கு பகுதியில் மட்டும் 2,500 குடும்பங்கள் உள்ளன. இதில் சில குடும்பங்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. மற்ற குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. இது குறித்து பலமுறை அந்த பகுதி மக்கள் முறையிட்டும் இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை.


இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுப்பதற்காக வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு நிவாரணம் வழங்கக்கோரி மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.

பின்னர் அவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் அண்ணாதுரையிடம் மனு அளித்தனர். கலெக்டர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதன் பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர்.

மேலும் செய்திகள்