துரைப்பாக்கத்தில் செல்போனை திருடிவிட்டு ‘5 ரூபாய்’ தரும்படி கேட்டவர் கைது பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மடக்கிப்பிடித்தனர்

துரைப்பாக்கத்தில், காவலாளியிடம் செல்போனை திருடிவிட்டு ‘5 ரூபாய்’ தரும்படி கேட்ட திருடனை, பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

Update: 2019-01-07 23:00 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் காவலாளியாக பணியாற்று பவர் காமராஜ் (வயது 45). நேற்று முன்தினம் இரவு தனது அறையில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது யாரோ, அவரது அறைக்குள் புகுந்து செல்போனை திருடிச்சென்று விட்டனர்.

நேற்று காலையில் எழுந்து செல்போன் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த காமராஜ், வேறு ஒருவரிடம் செல்போனை வாங்கி தனது செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசினார்.

போனை எடுத்து மறு முனையில் பேசிய நபர், “நான்தான் உனது செல்போனை திருடி வந்தேன். ‘5 ரூபாய்’ கொடுத்தால்தான் செல்போனை திருப்பிக் கொடுக்க முடியும். திருவான்மியூர் பஸ் நிலையம் அருகே வந்து பணத்தை கொடுத்துவிட்டு செல்போனை பெற் றுக்கொள்” என்று கூறி னார்.

இது குறித்து துரைப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் காமராஜ் புகார் செய்தார். பின்னர் போலீசாரின் அறிவுரையின் பேரில் செல்போன் திருடன் தெரிவித்தபடி காமராஜ், திருவான்மியூர் பஸ் நிலையம் சென்றார். பின்னர் அங்கு வந்த திருடனிடம் ‘5 ரூபாயை’ கொடுத்துவிட்டு செல்போனை வாங்கினார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த துரைப்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார், பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அதில் அவர், திருச்சி துவரக்குறிச்சியை சேர்ந்த அப்துல் ஹமீம் (42) என்பது தெரிந்தது.

அவரை கைது செய்த போலீசார், ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்