வேளாங்கண்ணி கடற்கரையில் மண் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை

வேளாங்கண்ணி கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-01-07 22:45 GMT
வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயம் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாக விளங்குகிறது. இது கீழை நாடுகளின் லூர்து நகர் என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது. இந்த பேராலயத்தின் அருகிலேயே வங்கக்கடல் அமைந்துள்ளது மேலும் சிறப்பு சேர்ப்பதாக உள்ளது. இதனால் வேளாங்கண்ணிக்கு வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் வேளாங்கண்ணி கடற்கரையில் கடந்த சில நாட்களாக திடீரென மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் கடல்நீர் கிராமங்களுக்குள் உட்புகுவதற்கு வாய்புள்ளது.

மேலும் கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு உயர் மட்ட கோபுரத்தின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு கீழே விழும் அபாய நிலை உள்ளது. இதனை தடுப்பதற்கு அந்த பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்