தண்டராம்பட்டில் விவசாயி கவனத்தை திசை திருப்பி ரூ.1 லட்சம் அபேஸ்

தண்டராம்பட்டில் விவசாயி கவனத்தை திசை திருப்பி ரூ.1 லட்சத்தை அபேஸ் செய்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-01-07 23:00 GMT
தண்டராம்பட்டு,

தண்டராம்பட்டு அருகே ராயந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அண்ணாமலை (வயது 28), விவசாயி. இவரது வீட்டு வேலைக்காக பணம் தேவைப்பட்டதால், நகைகளை எடுத்துக்கொண்டு தண்டராம்பட்டுக்கு வந்தார். அங்குள்ள ஒரு அடகு கடையில் ரூ.1 லட்சத்துக்கு நகைகளை அடகு வைத்துள்ளார்.

பின்னர் பணத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு செல்ல ஒரு ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தார். அப்போது 4 மர்ம நபர்கள் அவரது அருகில் வந்து உட்கார்ந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அண்ணாமலைக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அந்த மர்ம நபர்கள் திடீரென்று ஆட்டோவில் இருந்து இறங்கி தலைமறைவாகி விட்டனர். பின்னர் அண்ணாமலை தனது பணப்பையை தேடிய போது காணாமல் போய் இருந்தது. ஆட்டோவில் ஏறிய 4 மர்மநபர்கள் பணப்பையை திருடிச் சென்றது அவருக்கு தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அண்ணாமலை தண்டராம்பட்டு போலீசில் இதுகுறித்து புகார் செய்தார். அதன்பேரில் தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில் அண்ணாமலை மீது அரிப்பு ஏற்படுத்தும் பொடியைத் தூவி, அவரது கவனத்தை திசை திருப்பி மர்மநபர்கள் பணத்தை அபேஸ் செய்து சென்றது தெரியவந்தது. அந்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்