அம்மா இருசக்கர வாகன திட்டத்துக்கு நீலகிரியில் 1,074 பெண்கள் தேர்வு - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தகவல்

அம்மா இருசக்கர வாகன திட்டத்துக்கு நீலகிரியில் 1,074 பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

Update: 2019-01-08 22:30 GMT
ஊட்டி,

தமிழ்நாடு அரசின் அம்மா இருசக்கர வாகன திட்டம் பணிக்கு செல்லும், சுய தொழில் செய்யும் மகளிருக்கு 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் மானியத்தில் இருசக்கர வாகனம் பெற்று, தங்கள் பணியிடங்களுக்கு சிரமம் இல்லாமல் சென்று வர ஏதுவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் கிராம மற்றும் நகர் புறங்களில் இருந்து வேலைக்கு செல்லும் பெண்கள் இத்திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு ஆயிரத்து 74 பெண்கள் பயன் அடைந்துள்ள நிலையில், நடப்பாண்டில் 1,074 பயனாளிகளை தேர்வு செய்ய அரசு அனுமதி அளித்து உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயனடையும் பயனாளிகளுக்கு வயது வரம்பு 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலோ அல்லது சுயமாகவோ தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும். பயனாளிகள் இருசக்கர ஓட்டுனர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். பயனாளிகள் கொள்முதல் செய்யும் இருசக்கர வாகனங்கள் 1.1.2018-க்கு பின் உற்பத்தி செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும். 125 சி.சி. திறனுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

இந்திய வாகன சட்டத்தின் படி, பதிவு செய்யப்படத்தக்க வாகனமாக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் விதவைகள் மற்றும் ஆதரவற்ற மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது வரம்பு சான்று, இருப்பிட சான்று, ஓட்டுனர் உரிமம், வருமான சான்று, பணிபுரிவதற்கான சான்று, சுய தொழில் புரிவதற்கான சான்று, ஆதார் அட்டை, கல்வி சான்று (குறைந்தபட்ச தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி), புகைப்படம், விதவை, ஆதரவற்ற மகளிர், 35 வயதுக்கு மேல் திருமணமாகாத பெண்கள், திருநங்கைகள் ஆகியோருக்கான சான்றிதழ், சாதி சான்றிதழ் (தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்), மாற்றுத்திறனாளிகள் உரிய அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட சான்று, இருசக்கர வாகனத்திற்கான விலைப்பட்டியல் ஆகிய ஆவணங்களுடன் பயனாளிகள் விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பாக ஓட்டுனர் உரிமம், வயது சான்றிதழ் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தகுதி உள்ள பயனாளிகள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களில் இலவசமாக விண்ணப்ப படிவங்களை பெற்று, நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ அதே அலுவலகங்களுக்கு வருகிற 18-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம். இத்திட்டத்தின் கீழ் பெண்கள் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்