மகள் பிறந்த நாளுக்கு புத்தாடை வாங்க கணவருடன் சென்ற கர்ப்பிணி மயங்கி விழுந்து சாவு

தஞ்சையில், மகள் பிறந்தநாளுக்கு புத்தாடை வாங்க கணவருடன் சென்ற கர்ப்பிணி மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-01-08 22:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை சீனிவாசபுரம் சேப்பநாயக்கன்வாரி நடுக்குளம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி ஆதிமலர்(வயது 25). இவர்களுக்கு 2 வயதில் சாய்வர்ஷா என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது ஆதிமலர் 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். சாய்வர்ஷாவுக்கு வருகிற 11-ந் தேதி 2-வது பிறந்த நாளாகும். மகளின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட விரும்பிய பெற்றோர், மகளுக்கு புத்தாடை வாங்குவதற்காக தஞ்சை அண்ணாசிலை அருகே உள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் மாலையில் பாலகிருஷ்ணன் தனது மனைவி ஆதிமலரை அழைத்துக்கொண்டு நடந்து சென்றார். நடுக்குளம் பகுதியில் உள்ள பாலம் அருகே வந்தபோது திடீரென ஆதிமலருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதனால் அவரால் மேற்கொண்டு நடக்க முடியவில்லை. அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார்.

இதனால் பதறிப்போன பாலகிருஷ்ணன் அருகில் இருந்த வீட்டில் தண்ணீர் வாங்கி, மனைவிக்கு கொடுத்தார். பின்னர் அவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

அங்கு ஆதிமலரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஆதிமலர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதனை கேட்டதும் பாலகிருஷ்ணன் கதறி அழுதார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து மேற்கு போலீஸ் நிலையத்தில் ஆதிமலரின் தாய் மதுரை பாரதிபுரம் காலனி 3-ம் தெருவை சேர்ந்த தாயம்மாள் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஆதிமலருடன் வயிற்றில் வளர்ந்த 7 மாத சிசுவும் பரிதாபமாக இறந்தது. ஒரே நேரத்தில் இரண்டு உயிர்களை பறிகொடுத்த ஆதிமலரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.

மேலும் செய்திகள்