அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சையில் வகுப்புகளை புறக்கணித்து அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-09 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் மன்ற மாநில செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அரவிந்த்ராஜ் முன்னிலை வகித்தார்.

அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும். 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். 33 பாட பிரிவுகள் வேலை வாய்ப்புக்கு உகந்தது அல்ல என்று தமிழக அரசு அறிவித்துள்ளதை திரும்ப பெற வேண்டும்.

இலவச பஸ்பாஸ் உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

மேலும் செய்திகள்