சட்டசபையை முற்றுகையிட முயன்ற அரசு ஊழியர்கள் கைது; அடுத்தடுத்த ஆர்ப்பாட்டங்களால் பரபரப்பு

புதுவை சட்டசபையை முற்றுகையிட முயன்ற புதுவை அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அடுத்தடுத்து நடந்த ஆர்ப்பாட்டங்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-01-09 23:45 GMT

புதுச்சேரி,

மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அகில இந்திய அளவில் 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. புதுவை அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தினரும் இதில் பங்கேற்றனர்.

இதையொட்டி புதுவை கம்பன் கலையரங்கம் அருகே நேற்று காலை கூடினார்கள். அங்கிருந்து ஊர்வலமாக சட்டசபை நோக்கி புறப்பட்டனர். சங்க கவுரவ தலைவர் பாலமோகனன் தலைமை தாங்கினார்.

இதில் பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் ரவிச்சந்திரன், கிறிஸ்டோபர், மோகனகிருஷ்ணன், செல்வன், ஆனந்தகணபதி, சீதாராமன், முனீந்திரபாபு உள்பட பலர் கலந்துகொண்டனர். ஊர்வலம் அண்ணாசாலை, நேரு வீதி, மி‌ஷன் வீதி வழியாக ஆம்பூர் சாலையை அடைந்தது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதற்கு மேல் செல்லவிடாமல் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து அந்த இடத்தில் இருந்தபடி அரசு ஊழியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர் போலீசாரின் தடுப்புகளை மீறி சட்டசபையை முற்றுகையிட முயன்றனர்.

ஆனால் அவர்களை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 98 பெண்கள் உள்பட 233 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு அனைத்து ஊழியர்களுக்கும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் நலச்சங்கத்தினர் உள்ளாட்சித்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு தர்ணா நடத்தினார்கள். சங்க தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் சகாயராஜ் முன்னிலை வகித்தார்.

இதில் சங்க செயற்குழு உறுப்பினர்கள் சீனுவாசன், வீரப்பன், சையது சலீம், ஏழுமலை, கல்யாணசுந்தரம் மற்றும்பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் அஞ்சல் சேவைகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், மற்றும் தேசிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

சங்க செயலாளர்கள் வாசு, திருமுருகன், கலியமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். நிர்வாகிகள் நம்பிராஜன், கருணாகரன், ராஜகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஒரே நேரத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்களால் சட்டசபை பகுதி நேற்று பரபரப்பாக இருந்தது.

மேலும் செய்திகள்