புனே விமான நிலையத்தில் 24 துப்பாக்கி தோட்டாக்களுடன் 2 பயணிகள் சிக்கினர்

புனே விமான நிலையத்தில் 24 துப்பாக்கி தோட்டாக்களுடன் 2 பயணிகள் சிக்கினர்.

Update: 2019-01-10 22:15 GMT
புனே,

புனே விமான நிலையத்துக்கு பெங்களூரு செல்வதற்காக நேற்று 58 வயது பயணி ஒருவர் வந்தார். அவரது உடைமைகளை மத்திய தொழில்பாதுகாப்பு படை வீரர்கள் சோதனையிட்டனர். இந்த சோதனையின் போது, அவரது ஒரு பையில் 22 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த பயணியை பிடித்து விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில், அவரிடம் உரிமம் பெற்ற துப்பாக்கி இருப்பது தெரியவந்தது. விமான நிலையத்திற்கு வரும் அவசரத்தில் தோட்டாக்களை மறதியாக கொண்டு வந்துவிட்டதாக தெரிவித்தார்.

இன்னொரு சம்பவம்

இந்தநிலையில், விமான நிலையத்தில் டெல்லி செல்வதற்காக வந்த 61 வயது பயணி, 2 துப்பாக்கி தோட்டாக்களுடன் சிக்கினார். டெல்லியை சேர்ந்த அந்த பயணி புனேயில் என்ஜினீயராக இருக்கும் தனது மகனை பார்க்க வந்திருந்ததாக கூறினார்.

விசாரணையில், அவரிடம் உரிமம் கொண்ட துப்பாக்கி எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் அந்த தோட்டாக்கள் எப்படி பைக்குள் வந்தது என்பது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என அவர் கூறினார்.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயணிகள் இருவர் துப்பாக்கி தோட்டாக்களுடன் சிக்கிய சம்பவம் புனே விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்