திருப்பூரில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செல்போனில் அடிக்கடி பேசியதை தாய் கண்டித்ததால் விபரீத முடிவு

திருப்பூரில், செல்போனில் அடிக்கடி பேசியதை தாய் கண்டித்ததால் இளம்பெண் விஷம் குடித்து பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-01-11 00:22 GMT
அனுப்பர்பாளையம்,

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர்-அவினாசி ரோடு எஸ்.ஏ.பி. சந்திப்பு அருகே கோ-கோ நகரை சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி கலா. இவர்களுக்கு பிரியதர்ஷினி (வயது 19), பிரீத்தி (18) என்ற 2 மகள்கள் இருந்தனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மோகன் கலாவை விட்டு பிரிந்து தனியாக சென்று விட்டார்.

இதனால் கலா பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று தன்னுடைய 2 மகள்களையும் வளர்த்து வந்துள்ளார். 2-வது மகள் பிரீத்தி வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் கலாவும் பிரியதர்ஷினியும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பிரியதர்ஷினி செல்போனில் அடிக்கடி ஒருவருடன் பேசி வந்துள்ளார்.

இதை அவருடைய தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பிரியதர்ஷினி சம்பவத்தன்று இரவு தூங்க சென்றவர் படுக்கையறையில் விஷம் குடித்து இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்