கோவில்பட்டி அருகே லோடு ஆட்டோ டிரைவரிடம் ரூ.46 ஆயிரம் பறிப்பு 2 மர்மநபர்களுக்கு வலைவீச்சு

கோவில்பட்டி அருகே லோடு ஆட்டோ டிரைவரிடம் ரூ.46 ஆயிரத்தை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2019-01-11 22:15 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டி ஏ.என்.ஏ. நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகன் முத்து மாரியப்பன் (வயது 35). லோடு ஆட்டோ டிரைவர். இவர் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் தனது லோடு ஆட்டோவில் வாழைத்தார் லோடு ஏற்றுவதற்காக நெல்லைக்கு புறப்பட்டு சென்றார். கோவில்பட்டி அருகே இடைசெவல் நாற்கர சாலையில் சென்றபோது, சிறுநீர் கழிப்பதற்காக அவர், தனது லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தினார்.

பின்னர் அவர் சாலையோரத்தில் சிறுநீர் கழித்து கொண்டு இருந்தபோது, அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 30 வயது மதிக்கத்தக்க 2 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று முத்து மாரியப்பனிடம் கத்தியைக் காட்டி மிரட்டினர்.

பின்னர் அவர்கள், முத்துமாரியப்பனிடம் இருந்த ரூ.46 ஆயிரத்தை பறித்து கொண்டு, தங்களது மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி வழக்குப்பதிவு செய்து, லோடு ஆட்டோ டிரைவரிடம் பணத்தை பறித்து சென்ற 2 மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்