சோளிங்கரில் பஸ்சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி

சோளிங்கரில் மோட்டார்சைக்கிளில் சென்ற தனியார் நிறுவன ஊழியர் பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

Update: 2019-01-11 22:30 GMT
சோளிங்கர், 

இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-


சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது36). புலிவலம் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இவர் தினமும் வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் வேலைக்கு சென்றுவந்தார். வழக்கம்போல நேற்று காலை 7 மணியளவில் மோட்டார்சைக்கிளில் வேலைக்கு சென்றுகொண்டிருந்தார்.

சோளிங்கரில் உள்ள கோர்ட்டு அருகே சென்றபோது முன்னால் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ்சை முந்திச்செல்ல முயன்றார். இந்த நேரத்தில் எதிரே ஒரு பஸ் வந்துவிட்டது. இதனால் இரண்டு பஸ்களுக்கும் நடுவில் புகுந்து செல்ல முயன்றார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்து தனியார் பஸ்சின் பின்சக்கரத்தில் சிக்கிக்கொண்டார்.

இதில் பஸ் சக்கரம் ஏறிஇறங்கியதில் ஆதிமூலம் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சோளிங்கர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆதிமூலத்தின் உடலைமீட்டு பிரேதபரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விபத்தில் பலியான ஆதிமூலத்திற்கு கீதா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

மேலும் செய்திகள்