பெயர் பலகைகளில் நிறுவனத்தின் பெயரை தமிழில் எழுத வேண்டும் கலெக்டர் உத்தரவு

பெயர் பலகைகளில் நிறுவனத்தின் பெயரை தமிழில் எழுத வேண்டும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-01-12 22:45 GMT
விழுப்புரம், 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடைகள், தொழிற்சாலைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத்து வகையிலான வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் நிறுவனத்தின் பெயர் கட்டாயமாக முதலில் தமிழில் எழுத வேண்டும். அதற்கடுத்து தேவைப்பட்டால் ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளிலும் இடம்பெறுமாறு அமைக்க வேண்டும்.

இவ்வாறு அமைக்க தமிழக அரசு, அரசாணையை பிறப்பித்துள்ளதோடு அந்த அரசாணையை செயல்படுத்துவதற்கு சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையும் ஆணையிட்டுள்ளது.

எனவே வணிக நிறுவனங்களில் பெயர் பலகைகளில் நிறுவனத்தின் பெயரை தமிழில் எழுதுவதற்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெயர் பலகைகள் உரிய முறையில் உள்ளனவா? என தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள், தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு மேற்கொள்வார்கள். விதிமுறைப்படி பெயர் பலகை அமைக்காத நிறுவனங்களுக்கு அபராத தொகை விதிக்கப்படும்.

எனவே தமிழ் வளர்ச்சிக்கு அரசின் பங்களிப்பு மட்டுமின்றி வணிகர்களும் தங்களின் பங்களிப்பை அளிக்கும் விதமாக உடனடியாக பெயர் பலகைகளை தமிழில் அமைக்க வணிக நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்