குடும்ப தகராறில் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீனவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்

கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே உள்ள கூகுள் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீனவர்கள் மீட்டனர்.

Update: 2019-01-12 22:45 GMT
யாதகிரி,

யாதகிரி மாவட்டம் ஷாகாப்பூர் டவுனில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கூகுள் பாலம் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை 30 வயது நிரம்பிய ஒரு பெண் பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்தார். அவர் நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடினார். இதை பார்த்த அந்தப் பகுதியை சேர்ந்த மீனவர்கள், ஒரு பரிசலில் சென்று அந்த பெண்ணை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உயிருக்கு ஆபத்தில்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும், வதேதரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலைக்கு முயன்ற பெண் ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுகா காடர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் குடும்பத் தகராறில் தற்கொலைக்கு முயற்சித்ததும் தெரியவந்தது. இதுபற்றி வதேதரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்