தியாகதுருகம் அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

தியாகதுருகம் அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-01-12 22:30 GMT
கள்ளக்குறிச்சி, 

தியாகதுருகம் அருகே முடியநல்லூர் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் நேற்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் பிணமாக மிதந்தவரின் உடலை கைப்பற்றி அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர்.

விசாரணையில் அவர் வேங்கைவாடி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி காமராஜ்(வயது 55) என்பது தெரியவந்தது. மேலும் இவர் முடியநல்லூர் கிராமத்தை சேர்ந்த இளையாப்பிள்ளை என்பவரது நிலத்தில் கூலி வேலை பார்க்க வந்ததும், கிணற்றுக்கு அருகே நடந்து சென்றபோது தவறி விழுந்து இறந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து காமராஜின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்