காணாமல்போன 7 மீனவர்களையும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடத்தினார்களா?

காணாமல் போன 7 மீனவர்களையும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடத்தி சென்று இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்து உள்ளது.

Update: 2019-01-12 23:00 GMT
மங்களூரு,

உடுப்பி அருகே உள்ள மல்பே மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுவர்ண திரிபூரா என்ற படகில் கடந்த மாதம் (டிசம்பர்) 13-ந் தேதி, 7 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். ஆனால் அவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. மீனவர்கள் காணாமல் போய் விட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் மாயமான மீனவர்களை மீட்டு தர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி உடுப்பியில் மீனவர்கள் பேரணி நடத்தினர்.

பிரதமருக்கு கடிதம்

இந்த நிலையில் மீனவர்கள் சென்ற படகு மூழ்கவில்லை என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. கர்நாடக மீன்வளத்துறை மந்திரி வெங்கடராவ் நாடகவுடா மீனவர்களை ரவுடிகள் கடத்தி சென்று இருக்கலாம் என்றும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் மாயமான மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உடுப்பி பெஜாவர் மடத்தின் மடாதிபதி விசுவேஸ்வர தீர்த்த சுவாமி, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

மீனவர்கள் மாயமானது குறித்து மத்திய உளவுத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

பயங்கரவாதிகள் கடத்தினார்களா?

இந்த நிலையில் கர்நாடக மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்த போது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடத்தி சென்று இருக்கலாம் என்று தற்போது சந்தேகம் எழுந்து உள்ளது. இதுதொடர்பாகவும் தற்போது விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் குஜராத், கோவா, மராட்டிய மாநில கடலோர காவல்படையினரும் மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்