கயத்தாறில் விவேகானந்தர் ஜெயந்தி விழா: மோட்டார் சைக்கிள் ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு 35 பேர் கைது

கயத்தாறில் விவேகானந்தர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மோட்டார் சைக்கிள் ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவிலில் திரண்ட 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-12 22:00 GMT
கயத்தாறு, 

சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, சுவாமி விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், கயத்தாறு புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் அணிவகுத்து ஊர்வலமாக செல்வதற்கு, கயத்தாறு போலீசாரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர்.

இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனைக் கண்டித்து, சுவாமி விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் கயத்தாறு அகிலாண்ட ஈசுவரி அம்மன் கோவில் வளாகத்தில் நேற்று திரண்டனர்.

நற்பணி மன்ற நகர தலைவர் ராஜா, பா.ஜ.க. மாவட்ட செயலாளர் நாராயணன், வக்கீல் நீதி பாண்டியன், ஒன்றிய பொதுச்செயலாளர் கணபதி, பொருளாளர் ஆதிநாராயணன், செயற்குழு உறுப்பினர் மாரி காளை, இந்து முன்னணி நகர தலைவர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதற்கிடையே கோவில் வளாகத்தில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக, அங்கிருந்த 35 பேரையும் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்