நந்தம்பாக்கத்தில் ஏ.டி.ஜி.பி. கார் டிரைவரை தாக்கிய என்ஜினீயர் கைது

நந்தம்பாக்கத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.யின் கார் டிரைவரை தாக்கிய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-12 22:15 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த மணப்பாக்கத்தில் வசிப்பவர் அசோக்குமார். இவர், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.யாக உள்ளார். இவரிடம் போலீஸ்காரர் அழகேஸ்வரன்(வயது27) என்பவர் டிரைவராக உள்ளார்.

நேற்று காலை அழகேஸ்வரன், கூடுதல் டி.ஜி.பி. அசோக்குமாரை காரில் அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றார். அப்போது எதிரே மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர், ஏ.டி.ஜி.பி. கார் மீது உரசுவதுபோல் சென்றதாக கூறப்படுகிறது.

இதைகண்ட போலீஸ்காரர் அழகேஸ்வரன், “ஏன் இப்படி உரசுவது போல் வருகிறாய்?” என்று தட்டிக்கேட்டார்.

தாக்குதல்

இதில் கோபமடைந்த வாலிபர், அழகேஸ்வரனை சட்டையை பிடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி நந்தம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து கூடுதல் டி.ஜி.பி. கார் டிரைவர் அழகேஸ்வரனை தாக்கிய தாக ஆலந்தூரை சேர்ந்த கணேஷ்(30) என்ற வாலிபரை கைது செய்தனர்.

என்ஜினீயரான அவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவது விசாரணையில் தெரிந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்