மதுரை விறகுகடை அதிபர் வீட்டில் 500 பவுன் நகை-ரூ.8 லட்சம் கொள்ளை

மதுரையில் விறகுகடை அதிபர் வீட்டில் 500 பவுன் நகைகள், 8 லட்சம் ரூபாய் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Update: 2019-01-12 22:49 GMT
மதுரை,

மதுரை காமராஜர்புரம், குமரன் தெருவை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 72), மாட்டுத்தாவணியில் விறகுக்கடை வைத்துள்ளார். இவர் அ.ம.மு.க. பகுதி அவைத்தலைவராகவும், விறகுக் கடை சங்க துணைத்தலைவராகவும் உள்ளார். அவரது மனைவி ஆறுமுகத்தம்மாள். இவர்களுக்கு 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் திருமணம் முடிந்து அந்த பகுதியில் தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.

தங்கவேலு அதிகாலை 4 மணிக்கு விறகு கடைக்கு சென்று விடுவது வழக்கம். அவர் சென்ற பிறகு ஆறுமுகத்தம்மாள் வீட்டை பூட்டி விட்டு நடைபயிற்சி செல்வார். அதே போன்று நேற்று காலை கணவர் சென்ற பிறகு அவர் நடைபயிற்சி சென்றார். பின்பு அவர் 6 மணிக்கு வீட்டிற்கு வந்த போது உள்ளே பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பொருட்கள் எல்லாம் சிதறிக்கிடந்தன. உடனே அவர் இது குறித்து தங்கவேலுக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவம் அறிந்து கீரைத்துறை போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். போலீசார் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பின்கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து, அங்கிருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து 500 பவுன் நகைகள், 8 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பி சென்றது தெரியவந்தது.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு அங்கிருந்து வெளியே வந்து சாலையில் சிறிது தூரம் சென்று நின்று விட்டது.

போலீஸ் துணை கமிஷனர் ஜெயந்தி அங்கு வந்து விசாரணை நடத்தினார். அவர் தங்கவேல் மற்றும் அவரது மனைவியிடம் கொள்ளை சம்பவம் குறித்து விசாரித்தார். இதற்கிடையில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். கொள்ளை சம்பவம் குறித்து கீரைத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து தங்கவேல் கூறும்போது, நான் எப்போதும் அதிகாலையில் கடைக்கு சென்று விடுவேன். அதை அறிந்து கொண்டு தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. விறகு வாங்குவதற்காக 8 லட்சம் ரூபாய் வைத்திருந்தேன். மேலும் பீரோவில் எனது மனைவி மற்றும் மருமகள்களின் நகைகள் என சுமார் 500 பவுன் நகைகள் இருந்தன. அந்த நகை மற்றும் பணம் தான் கொள்ளை போயுள்ளது என்றார்.

போலீசார் இதுகுறித்து கூறுகையில், “வீட்டில் 500 பவுன் நகைகள் இருந்ததாக கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வளவு நகை, பணம் வைத்திருப்பதற்கான ஆவணங்கள் குறித்து கேட்டுள்ளோம். இது வரை எவ்வளவு பணம், நகை வீட்டில் கொள்ளை போனது என்பது குறித்து புகார் கொடுக்கவில்லை. அவர் கொடுக்கும் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்வோம். மேலும் அவர்களை பற்றி நன்கு அறிந்தவர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். கொள்ளை சம்பவத்தில் 2 நபர்களின் கைரேகை கிடைத்துள்ளது“ என்றனர்.

மேலும் செய்திகள்