பனப்பாக்கத்தில் நிர்வாண நிலையில் பெண் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை

பனப்பாக்கத்தில் நிர்வாண நிலையில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-01-13 22:30 GMT
பனப்பாக்கம், 

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பனப்பாக்கம் அண்ணாநகர் பஸ்நிறுத்தம் எதிரில் புதர்மண்டிய பகுதி உள்ளது. இங்கு நேற்று மதியம் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் நெமிலி போலீஸ்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக நெமிலி இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று பார்வையிட்டனர். பின்னர் பிணமாக கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பனப்பாக்கம் பஸ் நிறுத்தம் பகுதியில் பிச்சையெடுத்து வந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். அவர் பெயர், எந்த ஊர் என்பது தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து பனப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத், நெமிலி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்