கல்லிடைக்குறிச்சி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை

கல்லிடைக்குறிச்சி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2019-01-13 22:15 GMT
அம்பை, 

நெல்லை மாவட்டம் அம்பை தாலுகா கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தென்பத்திமேடு கிராமத்தை சேர்ந்தவர் முருகன். கூலி தொழிலாளி. அவருடைய மனைவி இந்திரா (வயது 26). இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 ஆண்டுகள் ஆகிறது. 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மனவேதனை அடைந்த இந்திரா தன்னுடைய உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

பலத்த தீக்காயம் அடைந்த அவரை மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் இந்திரா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்