தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2019-01-13 22:45 GMT
கொடைக்கானல்,

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது குளிரான காலநிலை நிலவி வருகிறது. தற்போது பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளே அதிக அளவில் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர்.

அதன்படி நேற்றும் அதிகாலையில் இருந்தே 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர். இதனால் நகரின் முக்கிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக முக்கிய சாலைகளை ஒருவழிப்பாதையாக மாற்றினர். இதையடுத்து போக்குவரத்து சீரடைந்தது.

போக்குவரத்து நெரிசல் ஒருபுறம் இருந்தாலும், சுற்றுலா இடங்களை பார்வையிட வந்தவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் விளையாடி பொழுதை கழித்தனர். அத்துடன் மலைகளுக்கு இடையே தரையிறங்கும் மேகக்கூட்டங்களைபார்த்து ரசித்தும், கொட்டும் பனியில் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் தங்கும் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கூடுதல் கட்டணம் வசூலிக்கும் விடுதி உரிமையாளர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்