சேலம் வீராணம் அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

சேலம் வீராணம் அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-01-13 21:45 GMT
சேலம், 


சேலம் வீராணம் அருகே உள்ள அல்லிக்குட்டை வள்ளுவர் காலனியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவருடைய மகன் பிரபு (வயது 23). குட்டைக்காடு சின்னனூர் பகுதியில் இவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

மன்னார்பாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் காட்டு ராஜா (30). கட்டிட தொழிலாளி. நேற்று பிரபு வீட்டிற்கு காட்டுராஜா மற்றும் அவருடன் சேர்ந்து தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர். பின்னர் அந்த வீட்டில் கழிவுநீர் தொட்டி கட்டும் பணியில் காட்டு ராஜா ஈடுபட்டு இருந்தார். அப்போது அருகில் குடிநீர் தொட்டிக்காக கட்டப்பட்டு இருந்த சுவர் இடிந்து அவர் மீது விழுந்தது. இதில் மூளை சிதறி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே காட்டு ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். காட்டு ராஜா இறந்ததை அறிந்த அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் காட்டுராஜா உடலை பார்த்து கதறி அழுதது அங்கிருந்தவர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வீராணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த காட்டு ராஜாவுக்கு, அமுதா (27) என்ற மனைவியும், லட்சுதா (7), ஹரிகரன் (3) என 2 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்