குழந்தைகளுக்கு துரித வகை உணவுகளை தவிர்த்து சத்து நிறைந்த பாரம்பரிய உணவு வகைகளை வழங்க வேண்டும் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

குழந்தைகளுக்கு துரித வகை உணவுகளை தவிர்த்து சத்து நிறைந்த நமது பாரம்பரிய உணவு வகைகளை வழங்க வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Update: 2019-01-13 22:45 GMT

புதுக்கோட்டை,

உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் உணவு பாதுகாப்பு கலப்பட விழிப்புணர்வு முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம் புதுக்கோட்டை வடக்கு வீதியில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, மருத்துவ முகாம் மற்றும் உணவு பாதுகாப்பு கலப்பட விழிப்புணர்வு முகாமை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அதிகாரி ரமேஷ்பாபு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் உணவுகளில் ஏற்படும் கலப்படங்கள் குறித்து அவ்வப்போது ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களில் உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் தரமான பொருட்கள், தரமற்ற பொருட்கள், கலப்பட பொருட்களை கண்டறிதல், இது குறித்த புகார்களை தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ளிட்ட விபரங்களுடன் தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேபோல அரசு பள்ளிகளிலும், மாணவ, மாணவிகளிடம் துரித வகை உணவுகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும், உடலுக்கு தேவையான சத்தான உணவுகள் நமது பாரம்பரிய உணவில் அதிக அளவில் கிடைப்பது குறித்தும், உடல் ஆரோக்கியத்தின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நாம் அன்றாட உணவு பழக்கத்தில் குறைந்த உப்பு, இனிப்பு, கொழுப்பு ஆகியவற்றை கடைபிடிப்பதன் மூலம் ஆரோக்கியமான நீண்ட வாழ்க்கைக்கு வழிவகுக்கும். தற்போது உள்ள விஞ்ஞான உலகத்தில் மாணவர்கள் தங்களுடைய உணவு பழக்கவழக்கங்களில் மாற்றங்களை கொண்டு வந்து உள்ளனர். குழந்தைகளுக்கு துரித வகை உணவுகளை தவிர்த்து சத்து நிறைந்த நமது பாரம்பரிய உணவு வகைகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்