விபத்தில் பூசாரி பலி; பஸ்சை சிறைபிடித்து உறவினர்கள் சாலை மறியல்

விபத்தில் கோவில் பூசாரி பலியானதால் தனியார் பஸ்சை சிறைபிடித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-01-13 23:00 GMT
அன்னவாசல்,

அன்னவாசல் சிவன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது 33). இவர் அன்னவாசல் ஆலடியம்மன் கோவில் பூசாரியாக இருந்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேலையின் காரணமாக இலுப்பூர் சென்றுவிட்டு மீண்டும் அன்னவாசலை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் தாண்றீஸ்வரம் முக்கம் என்னும் இடத்தில் வந்த போது வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராமு படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து அன்னவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராமுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே விபத்தை ஏற்படுத்தியது புதுக்கோட்டையில் இருந்து இலுப்பூர் செல்லும் தனியார் பஸ் தான். எனவே டிரைவரை கைது செய்ய வேண்டும் என கோரி ராமுவின் உறவினர்கள், பொதுமக்கள் அன்னவாசல் பஸ் நிலையம் அருகே புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் சம்பந்தப்பட்ட தனியார் பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலசந்திரன், இலுப்பூர் தாசில்தார் சோனை கருப்பையா, அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்